மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு கூட்டம் சேலத்தில் மார்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றுவருகிறது. அதில் பங்கேற்ற சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகம் முன் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பொதுவுடைமை போராளி காரல் மார்க்ஸ் 139-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியேற்றி காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் 4ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இனி வரக்கூடிய எல்லா தேர்தலிலும் வெற்றி பெறும்
முகாந்திரம் உள்ளது போல் பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024ம் ஆண்டு இங்கு ஆட்சிக்கே வந்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார். தேர்தலில் ஒரு முறை வெற்றி பெற்ற கட்சி அடுத்த முறை படுதோல்வி அடைந்த நிகழ்வுகளை எல்லாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
1972ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நாடு விடுதலை பெற்ற பிறகு மிகப்பெரிய அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அக்கட்சி பெற்றது. அதுபோன்ற வரலாறு அதற்கு முன்பு இல்லை. ஆனால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டபோது, இந்திரா காந்தி தோல்வியடைந்தார். 1972ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற கட்சி, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியையும் பார்த்து இருக்கிறது. மாநில தேர்தலில் அங்கேயுள்ள சூழ்நிலைகளால் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இப்படி வெற்றி பெற்ற பாஜக, இந்தியா முழுவதும் வெற்றி பெறுவோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
தற்போதுள்ள பாஜக அரசாங்கம் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தப்படும் நிலை உருவாகும். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. நாட்டில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை வீழ்த்த ஒரே மேடையில் ஒன்றிணையும் நிலை உருவாகி கொண்டு வருகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தை படிப்படியாக ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. சுமார் 9 லட்சம் கோடி வாரா கடன் கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. ஏர் இந்தியாவை டாடாவுக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய் துள்ளது. எல்லா பொதுத்துறையும் அடிமட்ட விலைக்கு கார்ப்பரேட் கொள்கையின் வெளிப்பாடுதான்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, மத பூசல், சாதி
கலவரங்களை முளையில் களையெடுப்பது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் கடைசி மனிதனுக்கு செல்வது என்பதெல்லாம் அரசின் நல்ல நோக்கங்கள். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசி இருப்பதை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள், மாநில அரசின் உரிமைகளை, மக்களின் உணர்வுகளை பறிக்கும் முறையில் இருக்ககூடாது. அந்தநிலை தொடர்ந்தால், ஆளுநரின் பதவி தேவையா? என விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு
உறுப்பினர் டி.உதயகுமார், எம்.குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.