சேலம்:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஞாயிறன்று நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,542 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,542 கன அடியில் இருந்து 12,903 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.22 அடியாகவும், நீர் இருப்பு 62.55 டிஎம்சியாகவும் உள்ளது.
டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 6,000 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால், அணை நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் ஞாயிறன்று 100.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 928 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர் இருப்பு 29.6டிஎம்சி ஆக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்நிலையில், திங்களன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.16 அடியாக உள்ளது. அணைக்கு ஒரு வினாடிக்கு 924 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 29.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 100 அடியை தாண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.