சேலம், மே 6- ஏற்காட்டிற்குள் நுழையும் நபர்கள் குறித்த விபரங்களை சுகாதாரத் துறையினர் சேகரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வரும் வாகனங்களை மலைப்பாதையில் 20-வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் நிறுத்தி சுகாதாரத் துறையினர் அவர்களின் விபரங்கள், எங்கிருந்து வருகின்றனர் மற்றும் எந்த மலைக்கிராமத்திற்கு செல்கின்றனர் என்பது பற்றய விபரங்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநிலங்கள், சென்னை மற்றும் சிவப்பு மண்டலங்களில் இருந்து வரும் நபர்களிடம் இருந்து உடனடியாக கொரோனா சோதனைக்கான மாதிரிகளை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்துகின்றனர். மேலும் இப்பணியில் ஈடுபடும் சுகாதாரத் துறையினருக்கு உதவியாக அங்குள்ள தன்னார்வல இளைஞர்கள் ஏற்காட்டிற்குள் நுழையும் வாகணங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.