tamilnadu

img

கேரள மலைப்பகுதியில் 3 நாட்களாக சிக்கியிருந்த இளைஞர் மீட்பு

கேரள மலைப் பகுதியில் மூன்றாவது நாளாக சிக்கி தவித்த இளைஞர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். 
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புலா மலைப் பகுதிக்கு திங்கள்கிழமை பாபு உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது பாபு கால் தவறி செங்குத்தான மலை இடுக்கில் விழுந்துள்ளார்.
உடனிருந்த இளைஞர்கள் பாபுவை மீட்க முயற்சி மேற்கொண்ட நிலையில், பாபுவின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், மீட்க முடியவில்லை. உடனடியாக மலையைவிட்டு இறங்கிய இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினரால் இளைஞரை மீட்க முடியவில்லை. இதனால் இளைஞருக்கு அருகே வனவிலங்குகள் செல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
இந்நிலையில் பாலக்காடு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்றது. இளைஞர் சிக்கியுள்ள பகுதிக்கு அருகே ஹெலிகாப்டரை செலுத்த முடியாததால், நீண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 
இதையடுத்து, இளைஞரை மீட்பதற்காக வெலிங்டனிலிருந்து புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் ராணுவத்தினர் மலைப் பகுதிக்கு சென்றடைந்தனர். பெங்களூருவிலிருந்து கிளம்பிய 22 பேர் கொண்ட பாராசூட் குழுவினரும் இன்று காலை 4 மணியளவில் சென்றடைந்தனர்.  இதையடுத்து “மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை 5 மணியளவில் தொடக்கப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக உணவு குடிநீர் இல்லாமல் தவித்த இளைஞர் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டார்.