tamilnadu

img

நாங்கள் உடுத்துவதை நீங்கள் முடிவு செய்ய முடியாது

சென்னை:
உடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அபத்தமான உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சுடிதாருடன் துப்பட்டா கட்டாயம்; ஆண்கள் தூய்மையான சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும்; டீ சர்ட்டுடன்  வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு ‘அதிரடி’ உத்தரவு பிறப்பித் துள்ளது.தமிழக அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்-பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளை யும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது என்றும் இதுதொடர்பாக அரசு அதி காரிகளுக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புகார்களை தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் “அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வரவேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரலாம். ஆனால் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வரும் போது கண்டிப்பாக துப்பட்டா அணிந்து இருக்க வேண்டும். ஆண்கள் சாதாரண சட்டை அணிந்து பணிக்கு  வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால் துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.”

கண்ணியமான உடை அணிந்து வரவேண்டும் என்று ஏற்கனவே உடை குறித்து அரசு அலுவலகங்களில் உள்ள குறிப்பே போதுமானது. என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பது முறையல்ல.  பழமைவாதங்களிலிருந்து  வெளியேறி தற்போது தான் பெண்கள் இலகுவான  சுடிதார் போன்ற உடை களை அணிவதை இயல்பானதாக மாற்றி யுள்ளனர். பாலியல் சமத்துவத்தை மக்களி டம் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமையாகும். மாறாக சமூகத்தில் நடக்கும்
பாலியல் வன்குற்றங்களுக்கு பெண்களின் உடையை காரணமாகச் சொல்லும்    பிற்போக்குத்தனமான கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக உடை கட்டுப்பாட்டினை அரசே கொண்டு வருவது சரியல்ல. 

இது தனிநபர் உரிமை மற்றும் சுதந்திர மான செயல்பாட்டில் தலையிடுவதாகும். துப்பட்டா அணிவதால் ஒரு ஊழியரின் செயல்திறன் எப்படி மேம்படப் போகிறது என்பதை அரசு விளக்க வேண்டும். கலாச்சாரம் என்ற போர்வையில் உழைக்கும் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான  செயலாகவே உடைக்கட்டுப்பாட்டு அறி விப்பை பார்க்க வேண்டும்.
நாகரிகமான உடைகள் அணிந்து வருவதால் தேவையற்ற சில பிரச்சனைகள் உருவாகி உள்ளதாக எந்த பிரச்சனைகளை தமிழக அரசு கூறுகிறது என்று புரிந்துகொள்ள 
முடியவில்லை. பொதுவாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்  நடைபெறும் போது சமூக  அக்கறையுடன் பெண்கள் அமைப்புகள்  கண்டன  இயக்கங்களை முன்னெடுக்கும் போது, ‘உடை தான் பாலியல் வன்முறைக்கு காரணம்’ என்று பெரும்பாலான பிற்போக்குத்தனமான விமர்சனங்கள் வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி 
மாணவி சரிகா ஷா - வின் துப்பட்டாவை    எடுத்து ராகிங் செய்த போது சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததை  பார்த்து தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அடைந்ததை பார்க்க முடியும். சின்னஞ்சிறு குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகளும் அதிகரித்து வருகிறது. அக்குழந்தைகளின் ஆடைதான் பாலியல் வன்முறைக்கு காரணமா? பல அரசு அலுவலகங்களில் துப்புரவு பணியாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை உள்ள பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போதும், மேலும் பல்வேறு பிரச்சனைகளில் பதினாறு முழம் புடவை முதல் சுடிதார் போட்டு துப்பட்டா போட்டுள்ள, பெண்கள் உள்பட பாதிக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும்.

கடந்த காலங்களில் மதுரை ஆதீனம், பெண்கள் உடல் முழுக்க மூடிக் கொள்ளும் பர்தா அணிய வேண்டும் என்று கூறியபோது வலுமிக்க போராட்டங்கள் நடத்தியதாலும் நீதிமன்றத்திற்கும் சென்ற காரணத்தினாலும்  உடை கட்டுப்பாடு என்பது பேசப்படவில்லை என்பதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 
என்ன உடை உடுத்துவது, எதை உண்பது, என்ன படிப்பது,  யாரை மணப்பது போன்ற தனிமனித உரிமைகளை தமிழக அரசு புரிந்துகொண்டு உடை கட்டுப்பாடு குறித்து அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.