எழுத்தாளார் அஸ்வகோஷ் என்ற ராசேந்திர சோழன் (79) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
"புனைவிலக்கியத்திற்கும் முற்போக்கு கருத்துலகிற்கும் 1970கள் முதலாக காத்திரமான பங்களிப்பினைச் செய்துவந்த அஸ்வகோஷ் எனும் தோழர் ராசேந்திர சோழன் இன்று காலமானார் என்பதை கடுந்துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
17.12.1945 அன்று உளுந்தூர்பேட்டையில் பிறந்த ராசேந்திரசோழன், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக, தோழர் கே.முத்தையாவின் தலைமையில் தீவிரமாக இயங்கியவர். சிறுகதைகள் மட்டுமின்றி ஏராளமான அரசியல், வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அவரது முதல் சிறுகதைத்தொகுதியான 'பறிமுதல்' போலவே பின்னர் வந்த ‘எட்டுக்கதைகள்’ தொகுப்பும் பரவலான கவனம் பெற்றது. பத்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் வெளியிட்டுள்ளார். பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பயிற்சிபெற்று, பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். அவசர நிலைக்கு எதிரான அவரது விசாரணை என்கிற நாடகம் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டது. தமுஎசவுக்கு நாடக முகத்தை வழங்கிய முன்னோடி. பல மாவட்டங்களில் நாடகப்பட்டறை நடத்தி தமுஎச நாடகக்குழுக்களை உருவாக்க உதவினார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிற்காலத்தில் த.மு.எ.ச-விலிருந்து விலகியிருந்தாலும் இறுதிவரை ஓர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பெரும்பங்காற்றி மறைந்துள்ள தோழர் ராசேந்திர சோழன் மறைவுக்கு தமுஎகச தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.