கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் எடுக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டேர் நில பரப்பில் கனிமவள தாதுக்களை IREL மூலம் எடுத்திட ஒன்றிய பாஜக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, கீழ்மிடாலம் ஏ கிராமத்தில் 75 சர்வேயில் 204.6 ஹெக்டேர் நிலத்திலும், மிடாலம் பி கிராமத்தில் 108 சர்வேயில் 202.96 ஹெக்டேர் நிலத்திலும், இணையம் புத்தன்துறை கிராமத்தில் 91 சர்வேயில் 137.5 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் ஏ கிராமத்தில் 23 சர்வேயில் 41.10 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் பி கிராமத்தில் 34 சர்வேயில் 82.90 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு ஏ கிராமத்தில் 11 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு பி கிராமத்தில் 68 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், தாது மணல் எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 80 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும், 1064 ஹெக்டேர் நிலம் பட்டா நிலமாகவும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நீர் நிலைகளும், விளை நிலங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.