tamilnadu

கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் வருமா?: அமைச்சர் விளக்கம்...

சென்னை:
“தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, மீண்டும், கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு,’’ என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா உள்நோயாளிகள் பிரிவை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,” ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இதுவரை, 2.57 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன; 24 ஆயிரத்து, 500 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்” என்றார்.நோயாளிகளுக்கு சிகிச்சையை தாண்டி, நம்பிக்கையை விதைக்கும் முயற்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றுவதே மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றி என்றும் அமைச்சர் கூறினார்.அண்டை மாநிலங்களில் முன்பை விட, கொரோனா வேகம் இரட்டிப்பாகி உள்ளது. தமிழகத்தில் குறைந்து வந்தாலும், முகக் கவசம் அணிவதில் பொதுமக்கள் தளர்வு காட்டக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 99.9 சதவீதம் பேருக்கு, மீண்டும் தொற்று பாதிப்பு வருவதில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘’நிரந்தர தடுப்பூசி கண்டறியப்படும் வரை, தொடர்ந்து முகக் கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி, சுத்தமாக வைக்க வேண்டும்,’’ என்றார்.