tamilnadu

img

உதவித்தொகையை உயர்த்தக்கோரிய போராட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற மாற்றுத்திறனாளிகைள் கைது 

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை ஆயிரம்  ரூபாய் வழங்கப்பட்டு வருவதை தமிழக அரசு உயர்த்தி 3 ஆயிரம்  ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் மாற்றுத் திறனாளிகள் எழிலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை தலைமை செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், எழிலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதை கண்டித்து ரயில் நிலையம் முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில்வே ரயில் நிலைய வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில்களில் டிக்கட் வழங்க கூடாது என ரயில்வே ஊழியர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரித்தபடி இருந்தது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான டி. குமரவேல் மாவட்ட துணைத்தலைவர் ஏ. பாண்டி, புறநகர் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் நள்ளிரவில் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னையில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.