புதுச்சேரி மாநிலத்தில் கொள்ளை போகும் நீராதாரம்
புதுச்சேரியின் ‘நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2025, ஏப்ரல் 26-27 தேதிகளில் கொள்ளைபோகும் நீராதாரத்தைப் பாதுகாக்க, தென்பெண்ணை ஆற்றோரக் கிராமங்களில் நடைபயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. நீராதாரத்திற்கு வரக்கூடிய ஆபத்தை முன்னுணர்ந்து, விவசாயிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக பிரச்சாரத்தைத் தொடர்ந்து, “நீர் எங்கள் உரிமை, பறிபோகும் எங்கள் வாழ்வாதாரம்” எனும் தலைப்பில் புதனன்று (மே 14) பாகூரில் திறந்தவெளிக் கருத்தரங்கை நடத்த உள்ளது. நீராதாரத்திற்கு வந்திருக்கும் பேராபத்து புதுச்சேரி சிபிஎம் மாநிலக்குழு சார்பில், கடந்த 2025, பிப்ரவரி 16 அன்று துணை நிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், புதுச்சேரி நகரத்திற்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகக் கூறி, பிரெஞ்சு வளர்ச்சி முகமையிடமிருந்து ரூ.534 கோடி கடன் பெற்று நிறைவேற்ற இருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியது. இதே போன்ற திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுத்த முயற்சித்தபோது, பாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. தற்போது பாகூர் மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் ‘ஒப்புதல்’ அளித்ததாக அமைச்சர் சொல்வது உண்மையல்ல. மேலும் இத்திட்ட நடைமுறை அறிவியல்பூர்வமானது இல்லை என்பதோடு, அதிகாரிகள் ஆட்சியாளர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். பெரிய அளவில் கமிஷன் தொகை கைமாறி இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பாகூர் பகுதியும், புதுச்சேரி மாநிலமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கிய வரலாறு உண்டு. ஏரிகள், நீர்நிலைகள் ஆகியவற்றைப் பராமரித்த ‘குடிமராமத்து முறை’ வழிமுறைகளைப் பின்பற்றி வந்த சமூகம் இதுவாகும். புதுச்சேரி மாநிலத்திற்கான நீராதாரம் நிலத்தடி நீர் மட்டுமே. நிலத்தடி நீருக்கான ஆதாரங்கள் தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட சிற்றாறுகளும் அதன் படுகைகளுமே ஆகும். இவை புதுச்சேரிக்கு மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பகுதிகளும் இதை நம்பியுள்ளன. இந்த ஆற்றுப்படுகைகளின் நிலத்தடி நீர் அந்த மாவட்ட விவசாயிகளுக்கும் சொந்தமானதாகும். சிபிஎம் கேள்விகளும் கோரிக்கைகளும் சிபிஎம் எழுப்பிய முக்கிய கேள்விகள்: மேற்கண்ட திட்டத்திற்கு எவ்வளவு நிலத்தடி நீரை உறிஞ்சப் போகிறீர்கள்? 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தப் போகிறீர்களா? துணைநிலை ஆளுநருக்கு அளித்துள்ள கடிதத்தில் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்: 1.இத்திட்டத்தின் நிதிச் செயல்பாடுகள், பயனாளிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2.இத்திட்டத்தின் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், தற்போது முதல்வர் அறிவித்திருக்கும் 6 சாராய ஆலைகளுக்காகவா என்ற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது, அதற்கு உரிய விளக்கம் வேண்டும். 3.முழுமையான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தேவையான முன்னறிவிப்புடன் நடத்த வேண்டும். 4.பொதுப்பணித்துறையில் முழுமையான, ஆக்கபூர்வமான நீர் மேலாண்மைத் துறையைச் செயல்படுத்த வேண்டும். அவைகள் உள்ளூர் பஞ்சாயத்து, சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். 5.தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் பொய்யான பதில் மனுக்கள் தாக்கல் செய்து நிலத்தடி நீர் ஆணையத்தையும், உள்ளூர் மக்களையும் தவறான தகவல்கள் அளித்துத் தொடர்ந்து ஏமாற்றிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீராதாரங்களின் வரலாறு! புதுச்சேரிக்கு தென்பெண்ணை, சங்கரா பரணி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட சிற்றாறுகளே நீராதாரங்களாகத் திகழ்கின்றன. இவை தவிர நீரைத் தேக்கிவைக்கும் நீர்நிலைகளாக 84 ஏரிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய ஏரிகளாக ஊசுட்டேரியும், பாகூர் ஏரியும் இருக்கின்றன. புதுச்சேரி மாநிலத்தின் விவசாயத்தையும், குடிநீர் தேவைகளையும் இவைகளே பூர்த்தி செய்கின்றன. இந்த ஏரிகள் 12-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களாலும், விஜயநகர ஆட்சிக் காலத்திலும் வெட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. அவைகளின் நீர்வரத்து வாய்க்கால்கள், ஏரிகளைத் தூர்வாருதல், கரைகளில் மரங்களை நடுவது போன்ற அனைத்தையும் உள்ளூர் சமூகங்களே குடிமராமத்து முறையில் பராமரித்து வந்தன. 1910-ஆம் ஆண்டு முதன்முதலாகப் பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் பாளையத்திலிருந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ‘ஆயி’ என்ற நாட்டியமங்கையின் குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டதால், அந்த மங்கையின் பெயரால் புதுச்சேரி பாரதி பூங்காவில் ஒரு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த மண்டபமே புதுச்சேரி அரசின் இலச்சினையாகத் திகழ்கிறது. 1960-இல் தமிழ்நாடு அரசு சங்கராபரணி ஆற்றில் வீடூரில் அணையைக் கட்டியது. 1966-இல் தென்பெண்ணை ஆற்றில் சொர்ணாவூர் அணை கட்டப்பட்டு, வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பாகூர் ஏரிக்கு வருகிறது. சொத்து கைமாறிய அவலம் இடையில் ஆட்சியாளர்களின் சுயநலத்தாலும், கொள்கைகளாலும் தனியாரின் வணிகப் பொருளாகத் தண்ணீர் மாறி இருக்கிறது. விவசாயக் கொள்கைகள் மாறியதால் நிலத்தடி நீரும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் உறிஞ்சப்பட்டு வருகின்றது. 1954-இல் புதுச்சேரி விடுதலை அடைந்தபோது ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 200. ஆட்சியாளர்களின் தவறான விவசாயக் கொள்கைகளாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், சட்டவிரோதமாகப் பெருகிப்போன ரசாயன தொழிற்சாலைகளின் எண்ணிக்கையாலும், 2000-வது ஆண்டில் இதன் எண்ணிக்கை 8,000-ஆக அதிகரித்தது. காலநிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரியின் சராசரி மழையளவு (1,700 மி.மீ) இந்தியாவின் சராசரி மழையளவைவிட (1,200 மி.மீ) கூடுதலாகும். ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், பராமரிப்பு இல்லாததாலும் மழைநீர் வீணாகிக் கடலில் கலந்துகொண்டிருக்கிறது. விவசாய நிலங்களின் பரப்பளவு 1956-இல் 56,000 ஹெக்டேரிலிருந்து 2000-இல் 48,000 ஹெக்டேராகவும், 2016-இல் 27,247 ஹெக்டேராகவும், 2022-இல் 18,000, தற்போது 10,000 ஹெக்டேராகவும் குறைந்துவிட்டது. தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும், சட்டவிரோதமான ரசாயன தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுமே காரணம். பல கிராமங்களுக்குத் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் அவலம் தொடர்கிறது. புதுச்சேரி தண்ணீருக்குத் தன்னிறைவாக இருந்த நிலைபோய், தற்போது ‘தண்ணிக்கு...?’ புகழ்பெற்றதாக மாறியதற்கு யார் காரணம்? இடையில் ஒரு வெளிச்சம்-இழந்த நம்பிக்கை 1998-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ஏரிகள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உள்ளூர் சமூகத்தைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 64 ஏரிகள் செப்பனிடப்பட்டன. ஏரிகள் சங்கங்கள் உருவாகின. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. உப்பு நீர் வடிந்தது. ஆனால் 2004-இல் ஐரோப்பிய யூனியன் விலகியபின், அதிகார வர்க்கம் நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஊழலில் திளைத்து, மீண்டும் நிலத்தடி நீரை நாசம் செய்யத் தொடங்கியது. அதன் உச்சகட்டம்தான் தற்போது 24 மணிநேரம் குடிநீர் தருகிறோம் என்று கூறிக்கொண்டு புதுச்சேரியைப் பாலைவனமாக்கும் திட்டம். மக்கள் இயக்கத்தின் தேவை முதல் கட்டமாக திட்டத்தின்படி தென்பெண்ணையில் 40, சங்கராபரணியில் 14, மற்ற ஆறுகளில் 30 என மொத்தம் 84 ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கிணறுகளின் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் முழுமையான வணிக நோக்கத்திற்காகவே. தண்ணீர் மக்களின் வாழ்வாதாரம், பொதுச் சொத்து, வணிகப் பொருள் அல்ல. இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் எதிரானது. இத்தகைய மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்கொள்ள நீதிமன்றங்கள், அறிக்கைகள் மட்டும் போதாது. வலுவான மக்கள் இயக்கங்களே சரியான விடை. அந்த அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாகூர் கொம்யூன் பகுதிக் குழு போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. விதை நெல் போன்றது நீராதாரம் புதுச்சேரியில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் மாநிலம் தழுவிய இயக்கத்திற்கு சிபிஎம் அழைக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்களைச் சீர்குலைத்து, சாராய ஆலைகளையும் ரெஸ்டோ பார்களையும் திறப்பதற்கு ஆட்சியாளர்கள் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். எந்த விவசாயியும் விதை நெல்லை விற்கமாட்டான். சமூகத்தின் விதை நெல் என்பது நீராதாரங்களே. எச்சூழ்நிலையிலும் அதை இழக்க, வணிகப் பொருளா்க அனுமதிக்கக் கூடாது.