tamilnadu

img

சுதந்திரப் பள்ளு பாடிய வானொலி நிலையங்களை இயங்கவிடுங்கள் -சு.வெங்கடேசன் எம்.பி

ஐந்து தமிழ் வானொலி நிலையங்களை மூடும் முடிவினை கைவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

பிரசார் பாரதி "ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்" என்ற கொள்கையை பொங்கல் அன்றில் இருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. 

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவை உள்ளூர் பண்பாட்டுக்கான முக்கியத்துவம், மாநில மொழி வளர்ச்சி, நாட்டுப் புற கலைகள், அடித்தள திறன்களை அடையாளம் காணுதல், பன்மைத்துவம் இப்படி பெரும் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில் சென்னை தவிர்த்த ஐந்து வானொலி நிலையங்களை தரம் இறக்கி "நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள்" என்பதை "ஒலி பரப்பு நிலையங்களாக" மட்டும் மாற்றுவதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பது ஆகும். இந்த நிலையங்கள் இனி வாரத்திற்கு ஐந்து மணி நேரம் மட்டும் உள்ளூர் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்று அறிகிறேன். 

கடந்த வாரம் இந்த நிலையங்களின் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அழைக்கப்பட்டு இதற்கான அறிவுறுத்தல்கள் தரப்பட்டு இருக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. 

ஒரே நிகழ்ச்சியை எல்லா வானொலி நிலையங்களும் ஒலிபரப்பு செய்வது என்பது 
அலுப்பூட்டும் முறை மட்டுமல்ல, வணிகரீதியான வாய்ப்புகளையும் அழிக்கும் செயலாகும். தற்போது வானொலி நிலைய ஒலிபரப்புகளை ஸ்மார்ட் ஃபோன் மூலம் கேட்கும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு வானொலி நிலையங்களை படிப்படியாக மூடுவது ஏற்புடையதல்ல.

வானொலி நிலையங்களின் செயல்பாடு முடக்கம், ஊழியர் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு ஆகிய விளைவுகளை உருவாக்கும். ஆனால் அத்தோடு மட்டும் இதன் பாதிப்பு சுருங்கி விடுவதல்ல. "ஒற்றைப் பண்பாடு" என்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இம் முடிவு எடுக்கப்படுகிறது என்பதே மிக முக்கியமானது. 
எனவே இம்முடிவினை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.