சென்னை,பிப்.22- அமெரிக்காவைச் சேர்ந்தவர் சாரா ஹாஸ்லர், 69. இவர் நடனக்கலைஞர், நீச்சல் வீராங்கனை. இவரது முழங்காலில் வலி ஏற்பட்டு, நடக்க முடியாமலும், அன்றாட வேலைகளில் ஈடுபட முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், பயனளிக்கவில்லை. சென்னை, ஈ.சி.ஆரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் மதன் திருவேங்கடா, சாராவை பரிசோதித்தார். இதில், சாராவின் இடது கால் மூட்டு பகுதியில், கீழ்வாத குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு, குருத்தெலும்பு அறுவை சிகிச்சை நடைமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, டாக்டர் மதன் திருவேங்கடா கூறுகையில், உலகளவில், இவை பொதுவான பிரச்னை. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில், 19 சதவீதம் பேர், 75 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவீதம் பேர், கீல்வாத குறைபாட்டில் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு, முழங்கால் மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின், கால் முட்டிகளை மடக்கிஅமருதல், விளையாடுவது போன்றவற்றை செய்ய முடியாது. எனவே, சாராவுக்கு, 'ஆட்டோலொகஸ் காண்ட்ரோசைட் உள்வைப்பு' என்ற குருத்தெலும்பு சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், நோயாளியிடமிருந்து, குருத்தெலும்பு செல்கள் பெற்று, நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆய்வகத்தில் பராமரிக்கப்படுகிறது. குருத்தெலும்பு செல்கள் வளர்ந்த பின், உரிய பரிசோதனைக்கு பின், நோயாளியின் முழங்காலில், சிகிச்சை வாயிலாக குருத்தெலும்பு செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில், ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.தனது அன்றாட வேலைகளை செய்யும் அளவிற்கு, அவரது உடல் முன்னேற்றம் அடைந்து உள்ளது என்றார்.