2018 முதல் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் ஆகிய ஒன்றிய அரசின் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களிலிருந்து படிப்பை கைவிட்டுச் சென்ற பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக கொடூரமான, குரூரமான சாதிய பாகுபாடும் ஒடுக்குமுறையும் இந்த மிகப்பெரிய கல்வி நிலையங்களில் அரங்கேற்றப்படுவதன் விளைவே இது. இன்றைக்கும் இந்த நிறுவனங்களின் உண்மை முகம் இதுதான்.
படிப்பை பாதியிலேயே கைவிடுவது மட்டுமல்ல; மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை காரணமாக பட்டியலின-பழங்குடியின மாணவர்கள் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத கொடுமை இது. உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.