சென்னை, ஆக. 27 -8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி செவ்வாயன்று (ஆக.27) மாநிலம் முழுவதும் 9 மையங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
1992-2016 வரை ஓய்வு பெற்றவர் களுக்கு சேமநல நிதி திட்டத்தின் கீழ் 300 முதல் 1200 ரூபாய் வரை வழங்கப் பட்டு வந்தது. அதை நிர்வாகங்கள் நிறுத்திவிட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற வழக்கில் தொழிலாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அரசு அமல் படுத்தவில்லை. இதனால் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம். இதன்படி ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் முதல் 1.80 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும்.
மாதந்தோறும் 5-ஆம் தேதி காலை யில் வர வேண்டிய ஓய்வூதியம், அன்றைய தினம் இரவு நேரத்தில் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவதில் நிர்வாகத்தி டம் அக்கறையற்ற போக்கு உள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை ஓய்வு பெற்றவர் களுக்கு பணப்பலன்களை வழங்காமல் உள்ளனர். ஒவ்வொரு தொழிலாளிக் கும் ரூ. 20 லட்சம் நிலுவையில் உள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் ஓய்வூதி யம் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான 3 ஆயிரத்து 50 ரூபாய்தான் குறைந்த பட்ச ஓய்வூதியமாக உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச ஓய்வுதியம்தான் பெறு கின்றனர். இவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் மருத்துவப்படி வழங்கப்படுவதில்லை.
எனவே, கழகத்தில் உள்ள 96 ஆயிரம் ஓய்வூதியர்கள் பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும்; மருத்துவப்படியை 300 ரூபாயாக உயர்த்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு மறியல் நடைபெற்றது.
கிளைத் தலைவர் டி.குருசாமி தலைமை வகித்தார். அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே. கர்சன், மாநில பொருளாளர் வரதராஜன், துணைத் தலைவர் ஏ. ரைமண்ட், கிளை பொதுச்செயலாளர் கே. வீரராகவன், பொருளாளர் எஸ். ஆதிமூலம் உள்ளிட்டோர் பேசினர்.