tamilnadu

img

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய  தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

கிருஷ்ணகிரி, ஜூன் 12- தேன்கனிக்கோட்டை நகரின் கடைசியில் அஞ்செட்டி சாலையில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.   தற்போது, சுமார் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மழையின் போது பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுவரைக்கும் சரி செய்து தரவில்லை. இதன் விளைவு, பள்ளிக்கு முன்பு உள்ள இரும்பு கதவுகள் பல நேரம் திறந்தே கிடக்கின்றது. மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை வளாகம், போதிய வகுப்பறைகள், தேவைக்கேற்ப பெஞ்ச், டெஸ்க் வசதிகள் எதுவும் இல்லை. மேலும், விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் சுற்றுப்புறத் அனைத்தும் புல், செடி கொடிகள் புதர் மண்டியுள்ளது. மேடு பள்ளங்கள் சீர்படுத்த படாமல் உள்ளன. பள்ளியின் கட்டிடத்திற்கு வர்ணம் பூசி நீண்ட காலமாகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்குள் மாலையில் நேரங்களில், சமூக விரோதிகள் கூடாரமாக பல இடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இரவில் போதை பழக்கம் உள்ளவர்கள் பலரும், மாடுகளும் இங்கேயே படுத்து உறங்கி பள்ளி தொடங்குவதற்கு முன்பு எழுந்து செல்வதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் விளையாட்டு மைதான பகுதிகளில், கட்டிடங்களைச் சுற்றிலும் மதுபாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. பள்ளி வளாகத்தை சீர்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று 3 மாதங்களுக்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு பள்ளியை சீர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்டால் அக்கறையில்லாமல் மழுப்பலாக பதில் அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த பக்க சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட வேண்டும், தேவைக்கேற்ப பெஞ்ச் டெஸ்க்குகள், குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும், குப்பை கூளங்கள், மேடு பள்ளங்கள், செடிகொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திட வேண்டும், இரவில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.