tamilnadu

img

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கருத்தையும் திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

சென்னை, ஆக. 22 - பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுக் கொண்டது. எம்சிசி கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அப்போது, கிறித்துவக் கல்வி நிறுவனங்கள், மிஷனரிகள் குறித்து சில ஆட்சேபணை கருத்துக்களை வெளியிட்டார். மேலும், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மத்திய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மத ரீதியான கருத்துக்கள், வழக்கிற்கு தொடர்பில்லாத கருத்துக்கள் கூறப்பட்டிருந்ததை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக ஆட்சேபித்தன. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் முறையிட்டதை தொடர்ந்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், மிஷனரிகள் குறித்த கருத்தை திரும்ப பெற்றார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை வெளியிடுவதோடு, பெண்களுக்கு எதிராக தன் சொந்த கருத்தை பயன்படுத்தும் தளமாக நீதிமன்றத்தை நீதிபதி வைத்தியநாதன் பயன்படுத்துகிறார். எனவே, பெண்கள், கிறித்துவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை உள்ளிட்டு 64 பேர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக வியாழனன்று (ஆக.22) வழக்கறிஞர் ஆர்.வைகை, நீதிபதி வைத்தியநாதன் முன் ஆஜராகி, தாங்கள் அளித்த மனு குறித்து வலியுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையும் திரும்ப பெற்றார். ஒரே தீர்ப்பில் இரண்டு முறை தமது கருத்துக்களை நீதிபதி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.