tamilnadu

காவிரி டெல்டாவில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்

சென்னை, ஜன. 10 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டம்,  சீர்காழி வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் அறு வடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து விட்டன. இரண்டு, மூன்று நாட்கள் தண்ணீரில் மூழ்கி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிந்து வருகிறது.

 திருவாரூர் மாவட்டத்தில் குட வாசல், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பல கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களும், கதிர்வந்து பழுக்காத நெற்கதிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் மற்றும் ஒரத்த நாடு ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சாய்ந்துள் ளன. மேலும், குறுவை அறுவடை முடிந்து சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, எள், நிலக்கடலை பயிர்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வேளாண்மைதுறை அதிகாரி கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை விடுபடாமல் முழுமையாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கிட வேண்டும்.

பயிர்க் காப்பீடு செய்துள்ள பயிர்களுக்கான இழப்பீட்டை இந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலத்தோடு பெற்றுத்தர மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.