விழுப்புரம், ஜூலை 1- விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி என 3 நகராட்சி உள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சியில் 40க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் விழுப்புரம் நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தாம்பாளையம் ஏரிக்கு அருகே செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள திருமலை, மாருதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் அடிக்கடி இந்த குப்பைகள் தீ பிடித்து எரிவதால், அதில் இருந்து வெளியேறும் புகையால், அங்கு வசிக்கும் குழந்தைகள், முதியோர் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். கிணற்றடி நீரும் மாசடைகின்றன. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் ஜோதி, காவல் துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது நகராட்சி ஆணையர் மாற்று திட்டத்தின் மூலம் ஓராண்டுக்குள் குப்பைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார், இதனையேற்று அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.