செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (நவ.1) தலைமைச் செயலகத்தில் வெளியிட, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தயாரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக லயோலா கல்லூரி முன்னாள் தலைவர் பெர்னாட் டி சாமி தலைமையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்கு நர் சங்கர சரவணன், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆய்வு அதிகாரி விஜயராஜா ஆகியோரை ஆலோசனை குழு உறுப்பினர்களாக கொண்டு சிறப்பு மலர் தயார் செய்யப் பட்டுள்ளது.