tamilnadu

img

பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்....

சென்னை:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17ஆம் தேதி புதுதில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் முதல் தில்லி பயணமாகும். இதற்காக அவர் ஜூன் 16 ஆம் தேதி சென்னையிலி ருந்து புறப்பட்டு தில்லி செல்ல உள்ளார். 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குதல், தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் 18ஆம் தேதி புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருப்பதாக தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசியை ஒதுக்குவது, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு  அம்சங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;