tamilnadu

img

வேலூர் மாவட்டத்தில் இருந்து 36ஆவது மாவட்ட மாக ராணிப்பேட்டையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

கிருஷ்ணகிரி, நவ. 28- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தேன்கனிக்கோட்டை சாலையில் ஜீவா நகரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பொது மயானம்.  தின்னூர், ராமகிருஷ்ணா நகர், நேரு நகர், ராஜாஜி நகர், வாசவி நகர், கேசிசி நகர், அம்மன் நகர், கிருஷ்ணப்பா காலனி, ஜீவா நகர் உள்ளிட்ட சுமார் 22 நகர்களில் வசிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கான மயானமாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1984இல் அரசு அதிகாரிகளால் மயானத்திற்கும் சாலைக்கும் அளக்கப்பட்டதோடு சரி, அதன் பிறகு எந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை. தற்போது இந்த மயானம் பெரும் பள்ளங்கள், முட்புதர்களாக காட்சியளிக்கின்றன. மேலும் விஷப் பாம்புகள், நரிகள், பெரிய எலிகள், கீரிகள் உள்ளன.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மயானத்தை மறித்து அரசின் நுண் உர செயலாக்க மையம் நகராட்சியால் கட்டப்பட்டது.

அதன்பிறகு இந்த மையத்திற்குள் புகுந்தே இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் சாலையில் மூன்றடி உயரத்திற்கு குப்பைகளை கொட்டி உலர வைக்கின்றனர். இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தூக்கிக் கொண்டு கடும் துற்நாற்றம் வீசும் குப்பை மேட்டின் மீது ஏரிச் செல்ல வேண்டியுள்ளது. இந்த மையத்தின் பின் புறச் சுற்றுச்சுவர் கதவு வழியே மயானத்திற்குள் புகும் இடத்தில் மூன்றடி ஆழ பள்ளம் அகழி போல்  உள்ளதால் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. மயானத்திற்கு செல்வதற்கு பாதை முறையாக இல்லாததாலும், விஷப் பாம்புகள்  நடமாட்டம் உள்ளதாலும் பிரேதத்தை கொண்டு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.           முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் மயானத்தை சீர்படுத்தக் கோரி ஓசூர் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு சார்பில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், ஓசூர் ஒன்றியச் செயலாளர் பிஜி.மூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர்கள் ஆனந்த குமார், ஜெயராமன், மற்றும் சீனிவாசலு, ராஜா ஆகியோர் மயானத்தை பார்வையிட்டனர். மாநகராட்சி ஆணையர் உடனடியாக மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து, மயானத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி நவீன தகன மேடை,, நிழற்கூடம் அமைக்க வேண்டும். ஆழ் துளை கிணறு அமைத்து நீர்த் தேக்க தொட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். நுண் உர செயலாக்க மையத்திற்குள் உள்ள சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என  மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் தெரிவித்தார்.