tamilnadu

img

“காவலர் தேர்வில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயம்”  

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் காவலர் பணிக்கான தேர்வுகளையும், உதவி ஆய்வாளருக்கான தேர்வுகளையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  இந்த நிலையில், தேர்வு முறையில் சில மாற்றங்களை தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. தமிழ் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின்னர்தான் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வும், தமிழ் தகுதித் தேர்வும் ஒரே சமயத்தில் நடத்தப்படும். தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.  தமிழ் தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டு, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் காவலர் தகுதித் தேர்வுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதோடு, நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த தமிழ் தகுதித் தேர்வானது, 80 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் 20 நிமிடத்துக்கு நடத்தப்படும் எனவும் முக்கிய தேர்வான எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் அரசுப் பணிகளில் சேர்பவர்கள் கட்டாயமாக தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி காவலர் பணிக்கான தேர்வு முறைகளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.