tamilnadu

தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை மேற்கொள்க! ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை,செப்.29-  இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு செப்டம்பர் 29 ஞாயிறன்று முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு:

இராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து ஐசூனு-கூசூ-10-ஆஆ-411 மற்றும் ஐசூனு-கூசூ-10-ஆஆ-544  பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 அன்று நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த சிக்கலான பிரச்சனையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளேன்.

 எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.