திருவாரூரில் வெண்புள்ளி உடையவர்களுக்கான சுயம்வரம்
சென்னை, ஏப்.26- வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான 14வது சுயம்வரம் வரும் ஜூன் மாதம் திருவாரூரில் நடைபெற உள்ளது. வெண்புள்ளிகள் உள்ள திருமண வயதை எட்டியுள்ள இருபாலாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான சுயம்வரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. வெண்புள்ளிகள் உள்ளவர்களை அவர்களது சொந்த உறவுகள் கூட திருமணம் செய்து கொள்ளமுன் வரவில்லை. அவர்கள் என்ன படித்திருந்தாலும், என்ன சம்பாதித்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இவ் இயக்கம், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான சுயம்வரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை 402 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. பெற்றோருக்கு வெண்புள்ளிகள் இருந்த போதிலும் அவர்களது வாரிசுகள் இயல்பாகவே இருக்கிறார்கள். வெண்புள்ளிகள் நோயல்ல; அது பிறருக்கு தொற்றாது; பரம்பரை பரம்பரையாகவும் வராது என்பது அறிவியல் உண்மையாக இருந்தபோதிலும், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், வெண்புள்ளிகள் உள்ளவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் முக்கியமாக திருமணம். இந்தத்தடையை அகற்றி, வெண்புள்ளிகள் உள்ளவர்களும், மற்றவர்களைப்போல இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள செய்யப்படுகிற சிறப்பான ஏற்பாடுதான் வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான சுயம்வரம். இதில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை.வெண்புள்ளிகள் உள்ள திருமணவயதை எட்டியுள்ள ஆண்பெண் இருவரும்மே மாத இறுதிக்குள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். சுயம்வரத்திற்கு தேவையான ஆவணங்கள்: புகைப்படம், பிறப்பு சான்றிதழ், படிப்பு சான்று, இருப்பிட சான்று, ரேஷன் கார்டு,ஆதார் அட்டை, சுய வாக்குமூலம் மற்றும் கையெழுத்து, ஊதியச்சீட்டு மேலும் தகவலுக்கு கீழே குறிப்பிட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளவும். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், 4/8 தெய்வநகர் முதல்தெரு, பட்டேல்நகர், மேற்கு தாம்பரம், சென்னை-600045, தொடர்பு எண்-9840052464/044- 22265507.
குழந்தையின்மைக்கு பரிகாரம்: மோசடிப் பேர்வழிகள் கைது
விழுப்புரம், ஏப்.26- குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி தாலி சரடு ஏமாற்றி சென்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம்,கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டத்தூரில் கடந்த 22 ஆம் தேதி குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி 5 சவரன் தங்க தாலி சரடு ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கு குறித்து மாவட்ட காவல் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திருவல்லம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி வள்ளியம்மாள் என்பவர் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொண்டு தனது மகன் வல்லரசுவிடம் தகவல் தெரிவித்து, மறுநாள் வல்லரசு அந்த வீட்டிற்கு சென்று சாமிக்கு பரிகாரம் செய்வது போல் நாடகமாடி 5 சவரன் தாலி சரடு கழற்றி வாங்கி ஏமாற்றி தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திருவளம் கிராம முருகன் மகன் வல்லரசு (வயது 22), முருகன் மனைவி வள்ளியம்மாள்(46) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட நகை மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ராணிப்பேட்டை, ஏப்.26 – ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வாலாஜா நகர காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாலாஜா சுங்கச்சாவடி நோக்கி வேகமாக வந்த காரை சோதனை செய்த போது வாகனதிற்குள் முழுவதும் கருப்பு துணியால் அடைக்கப்பட்டு இருந்ததை சந்தேகத்தின் பெயரில் பரிசோதனை செய்ததில் ஒரு டன் குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதில் பெங்களூரை சேர்ந்த கல்யாணராம் (26) ராஜஸ்தானை சேர்ந்த கனா ராம் (29) ஆகிய இரு வாலிபர்கள் பெங்களூருவில் தங்கி குட்காவை சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து விசாரித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
விஐடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்
வேலூர், ஏப்.26- வேலூர் விஐடியில் 19-ம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாமை விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது, கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. உடல் ஆரோக்கியம் என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. அதை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு விதிப்பது விளையாட்டு. கல்வி எப்படி ஒருவருக்கு முக்கியமோ, அதே போல விளையாட்டும் முக்கியமானது. விஐடியில் மட்டும் தான் கோடைக்கால முகாம் கடந்த 19 ஆண்டுகளாக இலவசமாக நடத்தப்படுகிறது. இம்முகாம் ஏப்ரல் 26 முதல் மே 16வரை நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார். இதில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு துறை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.