சென்னை,டிச.13- அரசு பள்ளி மாணவர்களை பள்ளி சீருடையோடு திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் பங்கேற்க வைத்து பல்லக்கு சுமக்க நிர்பந்திப்பதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவண்ணாமலை தீப திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிலையை பல்லக்கில் சுமந்து செல்லும் வீதி உலா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த வீதி உலாவில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் பலரும் நாயன்மார்கள் சிலையை பல்லக்கில் சுமந்து ஊர்வலமாக செல்லும் காட்சி வருடா வருடம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்த ஆண்டும் மாணவர்கள் இந்நிகழ்வில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் ஈடுபடுத்தப்படும் மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள். சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களே பெரும்பாலும் அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் மத நிகழ்வில் பங்கேற்க வைப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் செயல்.
பள்ளி மாணவர்கள் வீதி உலாவில் பங்கேற்க பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்கிறதா? அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுத்தப்படுகிறார்களா? மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு பள்ளி மாணவர்கள் ஏன் பயன்படுத்தப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நாயன்மார்கள் சிலைகளை பள்ளி மாணவர்கள்தான் சுமந்து செல்கிறார்கள் என்றும், இது தீப திருவிழாவின் ஒரு அங்கம்தான் என்று நியாயப்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.