நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் இர்பான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித்சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருப்பது அம்பலமானது. இதைத்தொடர்ந்து அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது ராகுல், பிரவின், அபிராமி, இர்பான் ஆகிய 4 மாணவர்களும் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதோடு இடைத்தரகர்களாக திருவனந்தபுரம், மும்பை மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு இருப்பதும் தெரிந்தது. லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.ராகுல், பிரவின், அபிராமி உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் தேனி அழைத்துச் செல்லப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்ததை தொடர்ந்து பிரவின் மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள படித்து வருகிறார். சமீபத்தில் ஆள்மாறாட்டப் புகார்கள் வெளியானதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்.பி. பி.எஸ். படிப்பில் 100 பேர் சேர்க்கப்பட்டனர்.
அந்த 100 பேரின் சேர்க்கை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இர்பான் மட்டும் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து மாணவர் இர்பானின் வாணியம்பாடி வீட்டு முகவரிக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரிஜிஸ்டர் தபால் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று முதலாம் ஆண்டு சேர்க்கை ஆவணங்கள், நீட் தேர்வு ஆவணங்கள், ஹால்டிக்கெட் மற்றும் மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று இர்பானுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மாணவர் இர்பான் சேலம் தீவட்டிப்பட்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை முகமது சபியை நேற்று வாணியம்பாடியில் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.