அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் நிறைந்தது மனம் திட்டம்
கடலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திடவும், 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடையவும் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்றது. அதன்படி, 2024-25 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 96.06 விழுக்காடு தேர்ச்சி பெற்று, மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியில் 10ஆவது இடமும், அரசுப்பள்ளிகளில் அளவில் 5ஆவது இடமும் பெற்றுள்ளது. பள்ளி கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் வகையில் விஷன் 2000, கல்லூரி கனவு, உயர்வுக்குப் படி உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் "உயர்கல்வி வழிகாட்டி குழு" அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் 10 மாணவர்களுக்கு ஒரு பொறுப்பு ஆசிரியர் என்ற வீதம் நியமிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை(ஜூன் 26) நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான சிறப்புக் குறைதீர் முகாமில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் போன்று ஏதேனும் ஒரு உயர்கல்வியை அடைவதை நோக்கமாகக் கொண்டு கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவு செய்தல், மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் துறைப் பிரிவுகள் தேர்ந்தெடுத்தல், உயர்கல்விச் சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள் பெறுதல், உயர்கல்விக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தங்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையில், பொதுப்பிரிவு மற்றும் உட்பிரிவுகளின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதையொட்டி, கடலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கைக்காக நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.இதில், அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்விச் சேர்க்கைக்காக விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை மாணவர்கள் திறம்பட பயன்படுத்திக்கொண்டு தங்களது உயர் கல்விக் கனவை அடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனாளிகளின் கருத்துகள்: நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவன் முகமது யாசின் கூறுகையில்,"நான் நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து 383 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனக்கு உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் எவ்வாறு துறை மற்றும் கல்லூரியினைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெறுவதாக எனது பள்ளி மூலம் தகவல் தெரிவித்தனர். எனது விருப்பத்தின் பேரில் பெரியார் கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் பிரிவில் உடனடியாக இன்றைய தினமே சேர்ந்துள்ளேன்." மாணவி அமீரா, "பரங்கிப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். பள்ளி மூலம் நான் இம்முகாமில் பங்கேற்றேன். இங்கு எனக்கு உயர்கல்விச் சேர்க்கை குறித்து ஏராளமான அறிவுரைகள் வழங்கினார்கள். எனது விருப்பத்தின் அடிப்படையில் காட்டுமன்னார்கோயில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்கை பெற்றுள்ளேன் என்றார்.