தென்னிந்திய இயக்குநர்கள் நேர்த்தியானவர்கள்...
சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படம் ‘ஒஜி’. இதில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஸ்மி வில்லனாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தென்னிந்தியப் படம். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “தென்னிந்திய சினிமா துறையில் நான் ஒரு படத்தில் நடிப்பேன் என்று கற்பனைகூட செய்ததில்லை. சுஜீத் மிகச் சிறந்த இயக்குநர். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டின் நம்மைவிட மிக நேர்த்தி யானவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் தங்கள் படங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் திரையில் தெரிகிறது. இந்தி சினிமாவில் தேவையற்ற விஷயங்களுக்காக பணம் வீணடிக்கப்படுகிறது. இதனால் அவை திரையில் தெரிவதில்லை. தென்னிந்திய சினிமாவில் விசுவல் எஃபெக்ட்ஸ் என்று வரும்போது ஒரு நேர்த்தி இருக்கிறது. தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து இந்தி சினிமா கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன!” என்று கூறினார்.
சிறு பட்ஜெட் படங்களுக்குக்
கட்டணத்தைக் குறைக்கவேண்டும்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளவை இவை: “சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி நமக்குப் போதாது. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது. நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் வெளியிடுவது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் படங்களை பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான எண்ணத்தை உடைப்பது திரை அரங்கங்களின் உரிமையாளர்களின் பொறுப்பு.
மறு வெளியீடு - ரீ ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களைத் திரையரங்கில் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு சென்னையில் கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இது உணர்த்துகின்றன. இந்த முறையை நாம் சிறு பட்ஜெட் படங்களுக்கும் அமலாக்க வேண்டும்!” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி...
‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள புதிய படம் ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
இந்நிலையில் இந்தக் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் பிப்.16 வெள்ளியன்று திரையிடப்பட இருக்கிறது. இதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து படக்குழுவுக்கு ரசிகர்களின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெட்டகம்
அண்ணாவை அசத்திய வாலியின் பாடல்...
கவிஞர் வாலி அப்போது திரையுலகில் கால் பதித்தும் பதிக்காமலும் இருந்தார். ஒரேயொரு பாடல் எழுதியிருந்த நிலையில் பிரபலமாகியிருக்காத அவருக்கு அந்த அழைப்பு வந்தது. சென்னை தியாகராய நகர் சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் இருந்த கிளப் ஹவுஸ் அப்போது நாடகக் கலைஞர்களாலும் சினிமா முயற்சியாளர்களாலும் நிரம்பியிருக்கும். அங்குதான் வாலியின் அறையும் இருந்தது. அவரது அறைத்தோழன் நாகேஷ். அவரும் சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்துகொண்டிருந்த நேரம். அவர்கள் நாடகங்களில் முகம் காட்டிவந்தார்கள். நாகேஷை அடிக்கடி நாடகத்தில் நடிக்க வைக்க ஒரு இளைஞர் சைக்கிளில் அங்கு வந்து நாகேஷை அழைத்துச் செல்வது வழக்கம். சைக்கிளில் நாகேஷை ஏற்றிக்கொண்டு சென்று தன் நாடகத்தில் அவரை நடிக்க வைத்துக்கொண்டிருந்தவர் கே. பாலசந்தர்.
அப்போது நாகேஷின் தூண்டுதலால் வாலி பாடல்களை எழுதியபடி இருப்பாராம். அவ்வாறு அவரது பாடல் வரிகளை அவர்கள் அறைக்கு வரும் நண்பர்கள் சிலரும் ரசிப்பதுண்டாம். நாகேஷின் நண்பரும் அவரது ஊரான தாராபுரத்துக்காரருமான சுந்தர்ராஜன் நல்ல பாடகர். முறைப்படி இசை பயின்றவர். வாலியின் வரிகளுக்குத் தன் குரலால் உயிரூட்டிக்கொண்டிருந்தவர் தாராபுரம் சுந்தர்ராஜன். அப்போது ப. நீலகண்டன் உருவாக்க இருந்த எம்.ஜி.ஆர். நடிக்கும் நல்லவன் வாழ்வான் படத்தில் மருதகாசி, பட்டுக்கோட்டையார், கவி. இராஜகோபால், ஆத்மநாதன் பாடல்கள் எழுதுகிறார்கள். ஒரு காட்சிக்கு ஒரு டூயட் பாடல் எழுதப்படுகிறது. அது நீலகண்டனுக்குத் திருப்தியைத் தரவில்லை. அப்போது வாலியைப் பற்றி மா. இலட்சுமணன் நீலகண்டனிடம் சொல்கிறார். இந்த மா. இலட்சுமணன் வாலியின் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு எழுத்தாளர். வாலியின் பாடல்களை தாராபுரம் சுந்தர்ராஜனின் குரலில் அடிக்கடி கேட்டு ரசித்தவர். எனவே, வாலிக்கு அரசு பிக்சர்ஸ் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.
அப்போதுதான் வாலியின் அப்பா இறந்து ஆறு, ஏழு மாதங்களாகியிருந்தன. எம்.ஜி.ஆர். படத்தில் பாடல் எழுதப்போவதை அம்மா அறிந்தால் மகிழ்வாளே என்று எண்ணிய வாலி பல்லவியை இப்படித் தொடங்கினார்:
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே...
பாடல் படத்தின் நாயகன் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவேண்டுமே... அந்தப் படத்தின் கதை, வசனகர்த்தா அண்ணா விரும்ப வேண்டுமே என்றெல்லாம் கவலை வந்தது வாலிக்கு. திராவிட இயக்கப் பின்னணியில் இருந்தவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் உயர்சாதி வாலிக்கு இடமிருக்குமோ என்றுவேறு எண்ணம். எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள். அண்ணா சரி என்று சொல்லிவிட்டால் எனக்கொன்றும் ஆட்சேபமில்லை என்றார் எம்.ஜி.ஆர். பாடலை முதலில் படித்த அவருக்கு அது நன்றாகவே தோன்றியது. பாடலை எடுத்துக்கொண்டு அண்ணாவிடம் காண்பிக்க காஞ்சிக்குப் போனார்கள்.
வாலியை அழைத்துப்போகக் கார் வந்தது. வாலியிடம் பாடலின் தாளைக் காட்டினார்கள். அதில் பல சொற்கள் வட்டமிட்டுச் சுழித்திருந்தன. அந்தச் சொற்களை மாற்றி எழுதச் சொல்வார்களோ என்று எண்ணினார் வாலி. அவரிடம் சொன்னார்கள், அண்ணாவுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது என்று. வட்டமிடப்பட்டிருந்த வரிகளைப்பற்றிக் கேட்டார் வாலி. அந்த வரிகளை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக்கூடாது என்றுதான் அண்ணா அப்படிச் சுழிக்குறிகளைப் போட்டிருக்கிறார் என்றார்கள். அந்த வரிகள் மிகவும் அருமை என்று அண்ணா பாராட்டியதாகச் சொன்னார்கள். நல்ல தமிழ் வர்ணனைகள் நிரம்பிய வரிகள் அவை. “எதையும் தாங்கும் இதயம் உதயசூரியன் எதிரில் இருக்கையில் உள்ளத்தாமரை மலராதோ...” - என்ற வரிகள் அண்ணாவை மிகவும் அசத்திவிட்டனவாம். அதுவரையில் திமுகழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியனைத் திரைப்பாடலில் எவரும் வைத்திருக்கவில்லை. அதை முதன்முதலில் செய்து அண்ணாவையே கவர்ந்துவிட்டார் வாலி என்றார்கள். அந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனும், பி. சுசீலாவும் பாடினார்கள். பாடல் பதிவின்போதும் தடங்கல்கள் வந்தன. படப்பிடிப்பின்போதும் இடையூறுகள் ஏற்பட்டன. புதிதாகப் பாடல் எழுத வந்திருக்கும் இளைஞனின் ராசி என்று பேசிக்கொண்டார்கள். மருதகாசியிடம் இன்னொரு பாடல் எழுதி வாங்கிவிடலாமா என்று யோசிக்கப்பட்டது.
மருதகாசியார் அழைக்கப்பட்டார். வாலியின் அந்தப் பாடலைப் பார்க்கவேண்டும் என்றார். வாங்கி வாசித்தார். மெய் சிலிர்த்துப்போய்ச் சொன்னார்: “மிகவும் நன்றாகத்தானே எழுதியிருக்கிறான். இந்தப் பாடலையா வேண்டாம் என்கிறீர்கள்? ஒரு புதிய இளைஞனின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்பவில்லை. இந்தப் பாடலையே பயன்படுத்துங்கள்!” - என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார் மருதகாசியார். அதன் பிறகு பத்து நாட்களுக்குப்பின் படப்பிடிப்பு தொடர்ந்தது. தணிக்கையில் எதையும் தாங்கும் இதயம், உதயசூரியன் போன்ற சொற்களை அனுமதிக்க முடியாது என்றார்கள். அதற்காக நீண்ட விவாதத்தை, போராட்டத்தை நடத்த வேண்டியதிருந்தது. பிறகு ஒருவழியாக அந்தச் சொற்களோடு பாடல் அனுமதிக்கப்பட்டது. பாடலும் ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்து நிலைத்தது.