காதல் கதை சொல்லட்டுமா?
சங்க இலக்கியம் என்பது ஜீவநதியை போன்றது. அந்த ஜீவ நதியிலிருந்து தித்திக்கும் சுனை நீரைப் போல இருக்கும் குறிஞ்சி பாட்டு கவிதைகளை அள்ளி பருக தருவதைப் போல ஓவியம் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரி எழுதியுள்ள காதல் கதை சொல்லட்டுமா என்ற நூல் வெளியாகி உள்ளது. இந்நூலில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் முன்னுரை சங்க இலக்கியத்தில் ஆழ அகலங்களை எடுத்துரைக்கிறது.
தமிழ்க்காரி அவர்களின், ஓலைச்சுவடி தமிழை கணினி தமிழ் யுகத்தின் யுவ யுவதிகளுக்கு கொண்டு செல்லும் பாங்கை அழகாக எடுத்துச் சொல்லி அவர் பாராட்டியுள்ளார்.
இந்நூலின் ஆசிரியர் தமிழ்க்காரி என்று அறியப்படும் சித்ரா மகேஷ் தமிழியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
முதல் முறையாக ஆண், பெண் சந்திக்கும் தருணத்தில் ஆழ் மனதில் ஏற்படுத்தும் உள்ளார்ந்த காதலை எடுத்தியம்புவது குறிஞ்சிப் பாட்டாகும்.
காதலித்த தருணத்தில் துவங்கி இல்லறம் துவங்கும் வரை. அவனைத் தவிர, வேறு எதுவும் இல்லை.கன விலும், நினைவிலும் என எல்லை யில்லா உணர்வுகளை தொட்டு துலக்குகிறது.
சங்கத்தமிழ் கவிதைகள் ஒவ் வொன்றும் ஓவியமாகவே நம்முடைய சிந்தனைக்கு உருவகப்படுத்தும். அதனை, ஓவியர் மருது மூலம் 22 ஓவியங்களாக கொடுத்துள்ளார். ஒவ்வொன்றையும் பத்தி பற்றி பேசும் அளவிற்கு அழகும் நேர்த்தி யும் கவிதையை பிரதிபலிக்கும் பாங்கும் சிறப்பானது.
தலைவனின் வருகைக்காக காதலியும் தோழியும் காத்திருக்கும் தருணத்தை சங்கத் தமிழின் கவிதை யை, அச்சு அசலாக தூரிகையால் நம் முன்னே காட்சிப்படுத்தி உணர்ச்சி வசப்படுத்துகிறார்.
ஆதிமனிதன் மொழி அறியும் முன்னே ஓவியம் வரைந்து உள்ளான். அத்தகைய ஆதி மொழியான ஓவியத்தை சங்க தமிழுக்கு வரைந்த அளித்த மருது பாராட்டுக்குரியவர்.
முதல் வரியான, “அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்”எனும் முதல் வரி துவங்கி
“குழுமலை விடர் அகம் உடைய வால் எனவே”
என்ற 261 வரிகளுக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கம், பாட லின் பொருள், அதற்கான விளக்கத் துடன் திரைப்பட பாடல்களையும் நிகழ்கால நடப்பையும் இணைந்து எளிய வரிகளில் சொல்லுவதே காதல் கதை சொல்லட்டுமா?
தற்கால இளம் தலைமுறைக்கு சங்க இலக்கியத்தை கொண்டு சேர்ப்ப தற்கு நூலாசிரியர் எடுத்துக் கொண்டு ள்ள அணுகுமுறை சிறப்பானதாகும்.
ஒவ்வொரு பாடலும், அதன் சூழ லும், அதில் உள்ள கருப் பொருளும் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளுவதற்கும் ஏதுவாக அமை கிறது.
உதாரணமாக “அம் குழை செயலை தாதுபடு தன் நிழல் இருந்த னம் ஆக” என வாசித்தால் பிடிபடாத சங்கத்தமிழை அழகிய தளிர்களுடன் நெருப்பின் நிறமொத்த அழகிய மலர்களின் தாது விழுகின்ற அசோக மரத்தின் குளுமையான நிழலில் இருந்தோம் என்று எளிய சொற்களில் தமிழ்க்காரி எடுத்துச் சொல்லும் போது நம் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது.
சமூகத்தின் இலக்கை இலக்கிய மும், அதற்கான வழியை இலக்கண மும் காட்டுகிறது என்கின்றனர். சங்க இலக்கியத்தின் ஒவ்வொரு கவிதையும் இலக்கணத்துடன் எப்படி இணைந்துள்ளது.
தமிழின் இலக்கண நூலான தொல் காப்பியத்துடன் பொருத்திப் பார்த்து விளக்கியுள்ளார். சங்கத் தமிழும் தொல்காப்பியமும் நுட்பமாக இலக்கியமும் இலக்கணமாகவும் இணைந்து உள்ளதை மிக அருமை யாக சுட்டிக்காட்டி உள்ளார்.
பூக்கள் பூத்த தருணம் எனும் திரைப்பாடல் எத்தனை அழகானது.
அதனை சங்க இலக்கியத்தில் வரும் 99 பூக்களின் பட்டியலை குறிஞ்சி பாடலில் ஒவ்வொன்றாக வரிசைப் படுத்தி அழகு பார்த்துள்ளார்.
வள்இதழ் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் எனத் துவங்கி எருக்கம் பூ வரை உள்ள ‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” எனும் படி குறிஞ்சி நிலத்தின் பூக்களை ஒவ்வொன் றையும் இன்றைக்கும் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவுக்கு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. இதனை வாசிக்கும் போது குறிஞ்சித் திணை வாழ்வு சொக்க வைக்கிறது.
ஒரு சொல் கூட வீணாகாமல் பார்த்து பார்த்து கபிலர் எழுதிய பாட்டு கதை தான் குறிஞ்சிப்பாட்டு. காதல் வாழ்வினை திருமணத்தில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை சொல்லு கின்ற இலக்கியமாகும். காதலியல் பாடம் சொல்லும் ஆதி தமிழ் பாட்டு என்கிற தமிழ்க்காரியின் கூற்று மிகையல்ல.
- எஸ்.பாலா
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
தமிழ்க்காரி
அந்தரி பதிப்பகம்
120, மேற்கு சம்பந்தம் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை
தொடர்பு எண் 7373736276
பக்கம் - 168 / விலை ரூ.300
‘தடம் பார்த்த நடை’
கவிதை மானுட உணர்வையும் அறிவையும் ஒரு சேர ஈர்த்து வாழ்வின் குறுக்கு நெடுக்குகளையும் மேடு பள்ளங்களையும் அலங்கரித்துப் பார்ப்பதோடு ஆய்விற்கும் உட்படுத்தும் ஓர் அற்புதமான இலக்கியப் பிரிவு. காலம் வெளியீடு வெளியிட்டுள்ள தனது “தடம் பார்த்த நடை” என்ற செறிவு மிக்க நூலின் மூலம் இத்தகைய கடலுக்குள் மூழ்கி “கவிதைக்கூட்ட” உலகிற்கு விலை உயர்ந்த சிந்தனை முத்துக்களை எடுத்து வந்து அள்ளி வழங்குகிறார் நாடறிந்த நற்றமிழ்க் கவிஞர் ஜீவி.
அனைத்து இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளர்களும் குறிப்பாக வளர்ந்து வரும் கவிஞர்களும் தவறாமல் இந்த முத்துக்களையும் மாலையாகத் தொடுத்து அணிந்து தத்தமது மேடையை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும். அம்முத்துக்கள் தமிழ் நறுமணத்தை நாளும் தரும் என்பது இந்நூலின் வழிப்படூஉம் உண்மை.
மொத்தம் 47 சிறு கட்டுரைகளான- மூர்த்திகள் சிறிதாயினும் அவற்றின் கீர்த்திகள் பெரிதாக உள்ளன. இந்நூலினை வாசிப்போரும் கவிதை உலகை நேசிப்போரும் இக்கருத்தை நன்கு உய்த்து உணரலாம். கட்டுரைத் தலைப்புகள் மட்டுமல்ல கட்டுரைகளின் வாக்கியங்களும் இயல்பான கவிதை நடையிலேயே மிளிர்கின்றன. கவிஞர் ஜீவி தமது உள்ளார்ந்த கவிதை நெஞ்சத்தை வஞ்சித்து விட்டுச் சாதாரண எழுத்தாளர் பகுதிக்குள் பிரவேசிக்க மிகவும் சிரமப்படுகிறார். அவரது கவி உள்ளமும் கருத்து வெள்ளமும் தெள்ளுதமிழில் துள்ளி விளையாடுவதைக் கட்டுரைகளின் ஒவ்வொரு வாசகமும் வார்த்தையும் நிரூபணம் செய்கின்றன.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள கவிஞர் ஸ்ரீரசா அளவிட்டுள்ளதுபோல, தமிழ்க் கவிதை பற்றியும் கவிஞர்கள் பற்றியும் தம் அனுபவம் சார்ந்த கவிதை வாழ்வில் இருந்து ஜீவி புதிய கோணங்களில் கவித்துவமும் வாழ்வு அனுபவமும் உற்றுநோக்கலும் நிறைந்த தம் சொல்லாடலை நிகழ்த்துகிறார். கருத்தாழமிக்க 272 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூலின் சிறப்பியல்புகளை நிறையப் பட்டியலிடலாம்.
இப்பொழுது பரந்துபட்ட தமிழ்க் கவிதை உலகின் தற்காலக் கவிதை படைப்புகளிலிருந்து படைப்பாளிகளின் நீண்ட பெயர்ப் பட்டியலை நினைவு கூர்கிறார் ஜீவி. பாரதிக்குப்பின் இன்றுவரை தமிழ்க் கவிதைக் களத்தில் முரசு கொட்டி நிற்கும் அனைத்து வளர்ந்த-வளர்கின்ற வளரவிருக்கின்ற கவிஞர்கள் அனைவரது பெயர்களையும் ஆய்ந்து அறிந்து அவர்களது பிரகாசமான கவிதை வரிகளுடன் தமது கட்டுரைகளில் ஆங்காங்கே சிறப்புடனும் ஒரு சமூகப் படைப்பாளியின் பொறுப்புடனும் பதிவிட்டுள்ளார். ஜீவி அவதானித்துள்ள பரந்து பட்ட தமிழ்க் கவிதை யுகத்தின் நுட்பத் திட்பங்கள் அவரது கூரிய எழுத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்திற்குப் பிறகு தமிழ்க் கவிதை உலகில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிது புதிதான கவி வடிவப் பரிமாணங்கள், அவற்றினால் ஏற்பட்ட சமூகத் தாக்கங்கள் மற்றும் புதிய நூதனப் பார்வை கொண்ட இலக்கியப் போக்குகள் ஆகிய அனைத்தையும் ஆக்கபூர்வமாக அலசுகிறார்.
இக்கால எந்திரமய வாழ்வை, “தொடர்பெல்லைக்கு அப்பால் இருப்பது செல் மட்டும்தானா?” என்ற தம் வரிகளாலும், இன்றும் நிலவும் சமூக அவலத்தை “எத்தனை பேர் இழுத்தால் என்ன? இன்னும் வரவில்லை சேரிக்குள் தேர்” என்ற ஹைக்கூ வரிகளாலும், நவீன யுகத்தில் தாண்டவம் ஆடும் வறுமையை “ஒரு குத்துச் சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று தங்கையைத் தூக்க முடியாமல் தூக்கி வரும் அக்கா குழந்தைகள்” என்ற வரிகளாலும் ஜீவி கவிதைகளால் கருத்துப் போர் நடத்துகிறார். இன்றைய இளம் படைப்பாளிகளை இணைத்து ஏறுநடை போடுவது இவரது படைப்பாற்றலின் பேறு.
புதுக்கவிதையின் பிதாமகர் நா.பிச்சமுர்த்தி, உவமைக் கவிஞர் சுரதா, அப்துல் ரகுமான், மு மேத்தா, புதுகை பாலா, கந்தர்வன் ஆகிய முன்னோடி ஆளுமைகளைப் போற்றி வருங்காலக் கவிதை இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சுகிறார் ஜீவி.
- சி.பாலையா புதுக்கோட்டை
தடம் பார்த்த நடை(கட்டுரைகள்)
ஆசிரியர் : ஜீவி
வெளியீடு: காலம்,
25, மருதுபாண்டியர் 4வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, மதுரை-625 002. பேசி: 9443078339
பக்கம் : 272 - விலை. ரூ.340/-