tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்எஃப்ஐ முற்றுகை போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 அன்று நடைபெற்றது. கடந்த காலங்களை போலவே நடப்பாண்டிலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல்வேறு சர்ச்சை சம்பவங்களுடன் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவு, ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனா். ஆனால் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்ததால் சக மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் சந்தேகம் வலுத்தது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்த மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுக்காததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.