சென்னை, மார்ச் 18 - கோவில் நிலங்களை பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் அறநிலையத் துறையின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் பயனாளிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், விவசாய நிலங்களை குத்தகை சாகுபடி செய்வோர் என ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் செலுத்த முடியாத வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும் வாடகை, குத்தகையை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில், குடியிருப்புகளுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூடி எந்த ஒரு கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. இதற்கிடையில் அறநிலையத்துறை அமைச்சரும், ஆணையரும் தினசரி அறிவிப்புகளை வெளியிட்டு பயனாளிகளை அச்சுறுத்தி வருகின்றனர். வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் அசையா சொத்துகளை ஏலம் விடப்படும் என்று அறிவித்தனர்.
துறையின் அச்சுறுத்தும் நடவடிக்கையை கண்டித்து, ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் அறைகூவல் விடுத்தது. இதன்படி வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட பயனாளிகள் ஆணையர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்த சங்க நிர்வாகிகளை அழைத்து சென்றனர்.
முதலமைச்சர் தலையிட வேண்டும்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், “அறநிலையத்துறை கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக மக்கள் வசிக்கின்றனர்; நிலத்தை சாகுபடி செய்து வருகின்றனர். குடியிருப்போருக்கு வாடகையை பல மடங்கு உயர்த்தி, அதை 2011ஆம் ஆண்டிலிருந்து கட்ட வேண்டும் என்று துறை நிர்ப்பந்திக்கின்றது.
வாடகை செலுத்த தயாராக உள்ளோம். அநியாய வாடகையை செலுத்த இயலாது. 1000 சதுர அடி குடியிருப்புக்கு 32ஆயிரம் ரூபாய் வாடகை கேட்பது எந்த வகையில் நியாயம்? பல லட்சம் ரூபாயை குறிப்பிட்ட தேதிக்குள் ஒரே தவணையாக செலுத்தவில்லை என்றால், வீடுகளை, இடிப்பது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் பயனாளிகள், சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடம் தர வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும். வாடகையை உயர்த்தும்போது பயனாளிகளின் கருத்தை கேட்க வேண்டும். 4.75 லட்சம் ஏக்கரில் குத்தகை விவசாயம் செய்யும் 2 லட்சம் விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
சட்டம், அரசாணைகளுக்கு புறம்பாக செயல்படும் போக்கை துறை ஆணையர் மாற்றக் கொள்ள வேண்டும். 50 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றார்.
துறையின் செயல்பாடு அதிருப்தி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “சமத்துவநீதி என்பதுதன் ஒரு பகுதிதான் சமூகநீதி. சமூக நீதி என்பது இடஒதுக்கீடு மட்டுமல்ல. மக்கள் வாழும் இடத்தை உறுதி செய்வதும்தான். எனவே, மக்களின் உணர்வுகளை பிரச்சனையின் தன்மையை புரிந்து கொண்டு அரசு நடக்க வேண்டும். பாஜகவை சமாளிக்க மக்களை வதைக்கக் கூடாது. அரசு மீது நம்பிக்கை வைத்து அறப்போராட்டம் நடத்துகிறோம். அறநிலையத் துறை, அமைச்சரின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது” என்றார்.
“கோவில் நிலங்களை குடியிருப்பவர்களுக்கு வழங்க அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மீது திமுகவின் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நியாயமான வாடகையை செலுத்த மக்கள் தயாராக உள்ளனர். ஏற்கெனவே, நிர்ணயிக்கப்பட்ட வாடகை அநியாயம் என்பதால்தான் அதை சீரமைக்க வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னிச்சையாக கட்டணம் நிர்ணயிப்பது, ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
விரைவில் நல்ல செய்தி
இதன்பின்னர் ஆணையர் குமரகுருபரனை சங்கத்தின் அமைப்பாளர் சாமிநடராஜன், நிர்வாகிகள் நெ.இல.சீதரன், வ.செல்வம், துரைராஜ், பிரகாஷ்மூர்த்தி ஆகியோர் சந்தித்து 12 அம்ச கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். “கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும்” என்று ஆணையர் தெரிவித்ததாக சாமி.நடராஜன் தெரிவித்தார்.
இந்தப்போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், இரா.ஜெயராமன் எம்.சி., சங்கத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், எஸ்.வெள்ளைச்சாமி, ரவிகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.