tamilnadu

img

கொரோனா ஆபத்தை குறைத்து  மதிப்பீடும் முதல்வர்: திருமா வளவன்


சென்னை, ஏப்.18-
தமிழகத்தில்  கொரோனா தொற்றின் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுகிறாரா முதல்வர் என்ற கேள்வி எழுந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்த்திருக்கிறார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு முழுஅடைப்பு மட்டுமே ஒரே வழியாக இருக்காது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். சமூகப்பரவலை ஒத்திப் போடுவதற்கு மட்டுமே இந்த முழு அடைப்பு  உதவும். பரவலாகப்  பரிசோதனை செய்து  கொரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிப்பதன் மூலமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலொ செய்யப்படும் பரிசோதனைகளின்  எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான உபகரணங்கள் கையிருப்பு உள்ளதா என்பதைப் பற்றி  வெளிப்படையான விவரங்களைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.
நமது மாநிலத்தில் ‘ரெட் ஸ்பாட்’என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில்   கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி அங்கே பரவலாக விரைவு சோதனை முறைகள் (ராபிட் டெஸ்டிங்) மூலமாக சோதிக்க வேண்டும்.  அவற்றில், ‘பாசிட்டிவ் ’ என நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ‘ஆர்டிபிசிஆர்’ மூலமாக பரிசோதனை செய்ய வேண்டும். இதுதான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான  ஒரேவழியாகும் என மருத்துவ வல்லுனர்கள் கூறிவருகின்றனர். இந்த வழியை இதுவரை தமிழக அரசு கடைபிடித்ததாகத் தெரியவில்லை.
தற்போது மருத்துவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் இந்த தொற்றுப் பரவ ஆரம்பித் துள்ளது. அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. சிறப்பாக செயல்படுகிறோம்'  என்று வார்த்தைகளை வைத்து மக்களை குழப்பும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக் கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும். எனவே, முதலமைச்சர் அவர்கள் மருத்துவர்கள், உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்  கலந்தாலோசித்து, தமிழக மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.