கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி
போரூர், ஜூன் 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (21). கார் டிரைவர். இவர் மதுரவாயல் ஏரிக்கரையில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். செவ்வாயன்று (ஜூன் 18) அதிகாலை 4 மணி அளவில் அவர் தனது காரில் நண்பர்களான சரண்கிஷோர் (21), பிரவின் குமார் (21), அஜீத் (19) ஆகியோருடன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டி ருந்தார். மதுரவாயல் டோல்கேட் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் வேகமாக வந்த செல்வகணேஷ் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.இதில் செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். சரண்கிஷோர், பிரவின் குமார், அஜீத் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சகாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேமரா போன்கள் வந்து பல ஆண்டுகளாகியும் செல்பி மோகம் குறையவில்லை
சென்னை, ஜூன் 18- செல்போன்களில் முன்பக்க கேமரா வந்து பல ஆண்டுகள் ஆகியும் இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் குறையவில்லை என்றும் எனவே தான் பல நிறுவனங்கள் நவீன செல்பி போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதாக ஓப்போ இந்தியா நிர்வாகி ஜித்தின் அப்ரஹாம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்தியாவில் செல்போன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார். தமிழகத்தில் தனது சந்தைப் பங்கை அதிகரிக்க ஓப்போ திட்டமிட்டுள்ளது என்றும் கடந்த மே இறுதி வரை சென்னையில் மட்டும் ஓபோ சந்தைப் பங்கு 20விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார். தமிழகத்தில் 20 பழுது பார்க்கும் சேவை மையங்களைக் கொண்ட ஓபோ ஒரு மணி நேரத்துக்குள் 90 விழுக்காடு வெற்றி விகிதத்தில் பழுது பார்ப்பதாக கூகுள் விமர்சனங்கள் பாராட்டியிருப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக ஷார்க் பின் ரைசிங் கேமரவுடன் கூடிய ரூ 32,990 விலையுள்ள ஓபோ ரெனோ (8+128 ஜிபி) செல்போனை அவர் அறிமுகப்படுத்தினார். இது 48 எம்பி திறன் கொண்ட கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.