tamilnadu

img

விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கடிதம்

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும்  சுமார் 2 லட்சம்  தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றார்கள். நாள் ஒன்றுக்கு 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான கூலியை குறிப்பிட்ட காலத்திற்கு ஜவுளி வியாபாரிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு நிர்ணயம் செய்து வழங்கப்படுவது நடைமுறையாகும். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும், அந்த கூலியை உயர்வை வழங்குவதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்து வருகின்றார்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக விசைத்தறிக்கான கூலி உயர்வு கிடைக்காததால். வாங்கிய கடனை செலுத்த வழியின்றி பரம்பரை சொத்துகளை விற்று விசைத்தறியாளர்கள் தவித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் கடனில் சிக்கி தவித்து வருகிறார்கள். இச்சூழலில் 2017 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் 24-11-2021ஆம் தேதியன்று   மாநில  அமைச்சர்,  கோவை,  திருப்பூர்  மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி 23 சதவீத கூலி உயர்வு அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்த கூலி உயர்வை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள் மாநில அரசுக்கு  சவால் விடுகின்ற வகையில் ஒப்பந்தத்தை அமுலாக்காமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேவையற்ற சட்ட-ஒழுங்கு பிரச்சனை உருவாக்குகிறார்கள். ஆகவே தாங்கள் தலையீட்டு அமைச்சர்  முன்னிலையில்  நடைபெற்ற  முத்தரப்பு  பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளர்.