சென்னை, ஏப்.22- துணை நிலை ஆளுநரின் அதிகார போட்டியால் புதுச்சேரி மக்களுக்கு இன்னமும் இலவச அரிசி வழங்காத அவல நிலை தொடர்கிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தலா ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 9ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும் இம்மாதம் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது. பருப்பு மட்டும் இன்னும் வரவில்லை.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிரதேசங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் 1 லட்சத்து 71ஆயிரத்து 332 சிவப்பு நிறகுடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த நியாய விலை கடைகளில் அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்படும் என்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முடிவால், அக்கடைகளும் மூடியே கிடக்கிறது. நியாய விலை கடை ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்காத நிலையில் அரிசி எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு தெரியாமல் குடிமைப் பொருள் வழங்கும் அதிகாரிகளை அழைத்து அரிசி வழங்குவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தலையீடு இல்லாமல் அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், புதுச்சேரிக்கு வந்த அரிசியை பேக்கீங் செய்ய ரூ.5 கோடி செலவில் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன கிடங்கில் ஆமை வேகத்தில் அப்பணி நடைபெற்று வருகிறது. நியாய விலைக் கடை ஊழியர்களை வைத்து அரிசியை உடனே விநியோகம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது.
ஒருமாதமாகியும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரிசி கிடைத்தபாடில்லை. "கொரோனா தொற்றை விட நாங்கள் ஒவ்வொரு நாளும் பட்டினியால் பரிதவித்தே பெரும் வேதனையை அளிக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் புலம்புகின்றனர்.