சென்னை:
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது.கட்சியின் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.குறிப்பாக, செவ்வாயன்று (அக். 6) காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங் கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் புதனன்று (அக்.7) அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழுவை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களில் தனித்தனியாக புதன்கிழமை அதிகாலை மூன்றரை மணி வரை நீடித்தது. மூத்த அமைச்சர்கள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் அதிமுக தலைமையகம் வந்தனர்.அதிமுக தலைமையகம் வந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அறிவித்தார்.பின்னர் பேசிய துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக கூறினார்.
அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.பிறகு, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
வழிகாட்டும் குழு
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, டி. ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்பி ரா. கோபால கிருஷ்ணன், தற்போதைய எம்எல்ஏ கி.மாணிக்கம் ஆகிய பதினோரு பேர் வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள் ளனர்.இதில் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள். 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகும்.