tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விபத்தில் உயிரிழந்த ஜோதியின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி, மே16 - விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜோதியின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் அக்ரஹாரம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பெண் ஜோதி பாலகிருஷ்ணன்(வயது 42)  மே 11 அன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதித்ததில் மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்தும் ஜோதியின் உடல் உறுப்பு தானம் பற்றியும் அவர் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு ஜோதியின் குடும்பத்தினர் சம்மதித்தனர். தமிழ்நாடு அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் பரிந்துரைப்படி ஜோதியின் இரு சிறு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அபிராமி கிட்னி கேர் சென்டர் ஈரோடு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. இரு கண்களும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் வழங்கிய ஜோதியின் உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி,மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ராஜா, தினேஷ், அனைத்து துறை மருத்துவர்கள் மாணவர்கள் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.  முதல்வர் பூவதி ஜோதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சிறப்பு அன்னையர் தின விழாவில்  மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு  

ராணிப்பேட்டை, மே 16 – மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் தலைமையில் வெள்ளியன்று (மே. 16) மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அன்னையர்களை சிறப்பிக்கும்,  சிறப்பு அன்னையர் தின விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அன்னையர் தினம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டமும், கலை நிகழ்ச்சிகள் நடனம், கவிதை வாசிப்பு நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பாதுகாத்து வரும் அன்னையர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் வழங்கினார். இச்சிறப்பு நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகள் விஸ்வாஸ், பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர், நேசம், ஸ்மார்ட், துளிர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையம் (EIC - HI) போன்ற சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அவர்களின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில்  பந்த் போராட்டம் ஒத்திவைப்பு '

புதுச்சேரி, மே 16- மே 20 புதுச்சேரியில் நடைபெற இருந்த பந்த் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விவசாயிகள், தொழிலாளர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மே 20 அன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தினத்தில் புதுச்சேரியில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போரின் காரணமாக இப்போராட்டத்தை ஜூலை 9ஆம் தேதி நடத்துவது என்றும் அதுவரை வேலை நிறுத்தம், (பந்த்) மறியல் போராட்டங்களை ஒத்திவைப்பதென தில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள்  அறிவித்துள்ளது.  எனவே புதுச்சேரியிலும்  அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை தள்ளி வைப்பது என்று புதுச்சேரியில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட  தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, மே.16 - ஓசூர் அருகே தமிழ்நாடு,கர்நாடக மாநில எல்லையான பள்ளூரை சேர்ந்த அன்னையப்பா மனைவி முத்துலட்சுமி (40 வயது) ஓசூர் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.  வியாழனன்று (மே 15) வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது தலைமுடி இயந்தி ரத்தில் சிக்கியுள்ளது. முத்துலட்சுமி தூக்கி வீசப்பட்டதில் அருகில் இருந்த சுவற்றில் மோதி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவரை உடனடியாக மீட்டு ஓசூர் இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்து வர்கள் முத்துலட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஓசூர் அட்கோ காவல் துறையினர் முத்துலட்சுமி உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்து நிறு வனத்தில் விசாரித்து வருகின்றனர்.