tamilnadu

img

10 மாதமாக பேப்பர், டோனர் வழங்கவில்லை

சென்னை, மே 31-இ-சேவை, ஆதார் மையங்களுக்கு கடந்த 10 மாதமாக பேப்பர், டோனர்  உள்ளிட்ட உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஐடி மற்றும் இடிஇஎஸ் ஊழியர் சங்கம் (யுனைட்) சார்பில் தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (மே 31) மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தாததால் பல நேரங்களில் இன்டர் நெட் வேலை செய்வதில்லை. சர்வர்களை பராமரிக்காததால் அடிக்கடி சேவை துண்டிக்கப் படுகிறது, எனவே, இடையூறு இன்றி சேவை செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.சேவை மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், பணியிடத்தில் பாலியல் தொல்லை தருகிறவர்கள் மீது புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்குழு அமைக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யுனைட் அமைப்பின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறுகையில், “ஊழியர்களுக்கு 8ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங் கப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக ஊதியத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகையை திருப்பித்தர வேண்டும். ஊழியர்களுக்கு விரைவாக இஎஸ்ஐ அடையாள அட்டை வழங்க வேண்டும்” என்றார்.இப்போராட்டத்தில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், துணைத் தலைவர் எம்.சந்திரன், யுனைட் துணைச்செயலாளர் இளங்கோ நயினார் மற்றும் சுகுமார் உள்ளிட்டோர் பேசினர்.