tamilnadu

ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: ஒருவர் கைது

போரூர், ஜூலை 5- புதுப்பேட்டை சுப்பராயன் தெருவில் அரிசி கடை நடத்தி வந்தவர் எஸ்.கே. கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.50 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரது உறவினர் ஒருவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இதன் காரணமாக எழும்பூர், புதுப்பேட்டை, மாத்தூர் உள்ளிட்ட காவலர் குடியிருப்பில் உள்ள குடும்பத்தினர் ஏராளமானோர் கண்ணன் நடத்தி வந்த மாதச் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவானார்கள். இது குறித்து பணம் கட்டியவர்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணன், மாமனார் நாகராஜ், மைத்துனர் சதீஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை 4 மணி அளவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டை காலி செய்து தப்பிச் செல்ல முயன்ற போது கண்ணனின் மாமனார் நாகராஜை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சதீஷ், கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்ற னர். நாகராஜ் கைது செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.