சிதம்பரம், ஜூன் 14- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜம் ஜம் நகர், யூனுஸ் நகர், சித்தி நகர் என 5க்கும் மேற்பட்ட நகர்களின் பெயரைக் கூறி பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் முன் பணம் தேவையில்லை குலுக்கல் முறையில் மாதம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இடத்திற்கு தகுந்தார்போல் தவணைத் தொகை செலுத்தினால் போதும் வீட்டுமனை தருகிறோம் என சிலர் கூறியுள்ளனர். அதனை நம்பி சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 40 முதல் 50 தவணைகளாகப் பல கோடி ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர். கட்டியவர்களுக்கு இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை. மேலும் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அணுகி பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பணத்தைக் கட்டி ஏமாற்றமடைந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களை ஏமாற்றறிய நபர்கள் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பது என்றும், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.