சென்னை, ஜூன் 7- அயனாவரத்தில் தனது வீட்டு மாடியில் காயவைத்திருந்த துணியை எடுத்துவிட்டு பக்கத்து வீட்டு மாடியில் எகிறி குதித்த பெண் தவறி விழுந்து பலியானார். சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெரு பகுதியில் வசிப்பவர் சீனிவாசராவ் (56).
இவர் ஐசிஎப்-இல் பொறியாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஸ்ரீதேவி வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு ஒரு அடியில் எகிறி குதித்துசெல்லலாம். இதனால் அடிக்கடி எகிறி குதித்து உறவினர் மாடிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை மழை வந்ததால் ஸ்ரீதேவி வீட்டின் 2ஆவது மாடியில் காயவைத்திருந்த துணியை அவசர அவசரமாக எடுத்துள்ளார்.
பின்னர் பக்கத்து வீட்டு மாடியில் ஸ்ரீதேவி எகிறி குதித்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த நைட்டி காலில் சிக்கியதால் நிலைதடுமாறி 2 கட்டிடங்களுக்கும் இடையே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ஸ்ரீதேவியை மீட்டு ஐசிஎப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அயனாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.