tamilnadu

10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் சென்னை சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் சென்னை சர்வதேச மாநாடு   அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர், அக்.5-
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலாரின் 203ஆம் அவதார விழாவில் கலந்துகொண்டு, சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
வள்ளலார் அருட்பணி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட வஸ்திரங்களை ஏழை எளிய பொதுமக்களுக்கு அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து வடலூர் சத்திய ஞான சபை அருகே சர்வேத வள்ளலார் மையம் பி பிரிவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "வள்ளலார் அவர்களின் 203ஆம் வருவிக்க உற்றநாள் விழாவில் கலந்துகொண்டு சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து அன்னதானத்தை தொடங்கி வைத்தோம். வள்ளலாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதலமைச்சர் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை அரசு நிதியாக வழங்கியுள்ளார். இந்த சர்வதேச மையம் அமைக்க பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு 'பி' தளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வள்ளலாரின் சீடர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். மற்றொரு பகுதியான 'ஏ' தளத்தில் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவிற்குப் பின் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சென்னையில் மிகப்பெரிய அளவில் 10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள், குறிப்பாக 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் வள்ளலார் சர்வதேச மாநாட்டை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் 25 பேருக்கு பட்டயம் வழங்கி சிறப்பிப்பதோடு, வள்ளலார் குறித்த நூலும் வெளியிடப்படவுள்ளது" என்று அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜ சேகரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சி.ஜோதி உள்ளிட்ட சன்மார்க்க அன்பர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.