tamilnadu

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

சென்னை,ஜூன்  30- எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை  திங்களன்று (ஜூலை 1)  தொடங்கவுள்ளதால் தமிழகம், உள்ளிட்ட தென் மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கியது தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ``இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் தற்போது வரை 4800 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணி கிடைப்பதாகவும் எஞ்சிய 700 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு பணி வழங்கக் கோரியும் ஜூலை 1 முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். கடந்த 26-ஆம் தேதி சங்க நிர்வாகிகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்  அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மீதமுள்ளவற்றில் 100 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு மட்டும் பணி வாய்ப்பு தருவதாக தெரிவித்தனர். அதனை எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏற்காத நிலையில் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கவுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், உள்ளிட்ட மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.