tamilnadu

img

தொழில் தொடங்க கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி

தொழில் தொடங்க கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி

நாமக்கல், ஏப்.19- நாமக்கல் மாவட்டத் தில் முதற்கட்டமாக 457  கைவினை கலைஞர்க ளுக்கு தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்படும், என  கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத் தில் சனியன்று நடைபெற்ற அரசு விழாவில், கைவினைக் கலைஞர்களுக்கான நிதியுதவி திட்டத் தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல்  ஆட்சியர் அலுவலகத்தில் கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, 11 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் தொகையில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக இத்திட்டத்தின்கீழ் 654 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 457 விண்ணப்பங்களுக்கு கடனுதவிகள் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன, என்றார்.