குமுதம் நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிநீக்க நடவடிக்கைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குமுதம் நிறுவனம் மேற்கொண்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்க நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
குமுதம் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, நிறுவனத்தின் மனிதவளத்துறை சார்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற் தகராறு சட்டத்தின் (1947) அடிப்படையில் எந்தவித விளக்கமுமின்றி, அரசின் முன் அனுமதியின்றி, முன்னறிவிப்புமின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது சட்டப்படி தவறாகும்.
இதேபோல், குமுதம் நிறுவனத்தில் பணியாற்றும் பலருக்கும் இரண்டு முதல் மூன்று மாதம் வரை சம்பள நிலுவை இருப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆகவே, குமுதம் நிறுவனம் மேற்கொண்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்க நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
தொழிலாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆவண செய்யும் என்றும் உறுதியளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.