திடீர் மழையால் தெப்பமாக மாறிய கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம்!
கிருஷ்ணகிரி, மே 4- மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் வழக்கம் போல் கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் மழை நீரில் தத்தளித்தது. நகர பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் 2 அடி அளவு தேங்கி நின்றது. பேருந்து நிலையத்திற்குள் உள்ள பல கடைகளில் மழை நீர் கொட்டியது. இங்கு மழை வெயிலுக்காக போடப்பட்டுள்ள சீட்டுகள் பல இடங்களில் உடைந்தும் இல்லாமலும் காணப்படுவதால் மழை வரும் போது கடைகள் வைத்திருப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் கட்டிடங்கள் முழுவதும் ஈரமாகவும் மேற்கூரைகள் ஒழுகுவதுமாக காணப்படுகிறது. நகர பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும் மழையில் நனைந்து கொண்டே நிற்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது.பேருந்துகள் அனைத்தும் குளத்தில் நீந்திக் கொண்டே வருவது போல் காட்சியளிக்கிறது. பேருந்து தரைத்தளத்தை உயர படுத்தியும் கழிவுநீர் கால்வாய்கள் பெரிதாகவும் ஆழமாகவும் அமைத்தும்,வெயில் மழைக்கு போடப்பட்டுள்ள தகர மேற்கூரைகளை சீர்படுத்திடவும் வேண்டுமென பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தற்போது வீசிய சூறாவளி மற்றும் மழையை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உடனே நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தை சீர்படுத்திட வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.