tamilnadu

கலைஞரின் நூல்கள் நாட்டுடைமை ஆணை வெளியீடு

சென்னை,டிச.22- சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்று தந்த  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், முத்தாரம் உள்ளிட்ட அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப் படும்‌ என்று ஆகஸ்ட் 22 அன்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்ட அதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “ கலைஞரின் அனைத்து நூல்களும் நூல் ரிமைத்தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்ட அதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி பருவத்தில் எழுத தொடங்கி மாணவர் நேசன் பத்திரிகை தொடங்கி முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதியவர் கலைஞர். அதனைத் தாண்டி திரையுலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்த மாபெரும் தலைவர் கலைஞர். இதுவரை 179 படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அதற்கான நூல் உரிமைத் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கலைஞரின் நூலை நாட்டுடைமை ஆக்குவதற்கு தொகை வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் சொல்லி கட்டணமின்றி நூல் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.

அதற்கான சூழ்நிலை உருவாக்கித் தந்த அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எழுத்தாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.