tamilnadu

img

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி  பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று பெண்கள், குழந்தைகள், குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாடு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானம் பின்வருமாறு:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் சந்தேக மரணம்  தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகம் முழுமையான உண்மைகளை வெளியே சொல்லாமல் மறைக்க முயற்சித்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இதே பள்ளியில் ஏற்கனவே சில மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் செய்திகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சம்பவம் நடைபெற்று நான்கு நாள் வரை மரணத்திற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தியதும் நிலைமையை மோசமாக்கிட உதவியுள்ளது.  இப்பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களோடு நெருங்கியவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் கடைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளஅடிப்படையில் இச்சம்பவத்தில் நடந்துள்ள உண்மை நிகழ்வுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. முறையான விசாரணை நடத்தி அனைத்து விபரங்களையும் வெளிக்கொணர வேண்டும். இதில் தவறு இழைத்தவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.  மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். மாணவியின் இறப்பிற்கு நீதி கோரி நடந்துள்ள போராட்டங்கள் முழுவதும் இயல்பானது. எனினும், போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. வன்முறையை காரணம் காட்டி அப்பாவி மாணவர்களையும், பொது மக்களையும் கைது செய்யும் நடவடிக்கையினை காவல்துறை மேற்கொள்ளக்கூடாது என்பதையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து சிறுமிகள், பெண் குழந்தைகளிடம் மனிதத் தன்மையற்ற வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருவது கவலைக்குரியது. அரசாங்கம் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுமிகள், பெண் குழந்தைகளை பாதுகாத்திட வேண்டுமென மாநாடு கோருகிறது. தமிழக அரசு மேலும் இதுபோன்று மாணவிகள், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தடுத்திடவும், பாலியல் வன்முறை கொடுமைகள் நடக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.