சென்னை,ஜன.13- கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் வழங்கும் நகை கடன், சம்பள கடன், சிறுவணிகக் கடன்களின் உச்சவரம்பை உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மேலாண்மை இயக்குநர்கள், கூடுதல் பதிவாளர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24 ஆம் ஆண்டுக் கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் குறியீட்டை எய்துவதற்கு சில மத்திய கூட்டுறவு வங்கிகளின் கோரிக்கையை ஏற்று கடன்களின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நகை கடன் வழங்கு வதற்கான தற்போதைய உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பிச் செலுத்தும் காலமான 12 மாதங்களில் மாற்றம் இல்லை. சம்பள கடன் பொறுத்தவரை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 84 நாட்களில் இருந்து 120 மாதங்களாக உயர்த்தப்படுகிறது. சிறுவணிகக் கடன் பொறுத்தவரை ரூ.50 ஆயிரத்தில் இருந்து உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பி செலுத்தும் காலத்தில் மாற்றமில்லை. மேலும், தனிநபர் பிணையத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்களை பொறுத்தவரை ரூ.50 ஆயிரம் வரை ஒரு நபர் பிணையமும், ரூ.50,001 முதல் 1 லட்சம் வரை 2 நபர் பிணையம் அளிக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளை பின்பற்றி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டு றவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.