tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்... மீண்டும் உள்துறை அமைச்சர் பிடிவாதம்....

கொல்கத்தா:
நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் பிடிவாதத்துடன் கூறியுள்ளார்.குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநில முதல்வர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மக்கள்போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக அரசு மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் தாக்கூர் நகரில் மத்துவா சமூகத்தினர் கலந்துகொண்ட கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், இந்தப் போர் கிழக்கு இந்திய எல்லைகளை வலிமைப்படுத்தி சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகுந்தவர்களை வெளியேற்றுவதாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மத்துவா சமூகத்துக்கு சிஏஏ சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரைக் குழப்புகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பால்,குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு ஒத்திவைக்கப் பட்டது. பாஜக நிச்சயம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்கும்.நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

;